அவனுக்கென்ன...
கலைத்துப் போட்டு பார்க்கிறான் வாழ்கையை.
பிடிக்காத போது, தொலை தூரம் செல்கிறான்
பழகாத முகம் பார்த்து நட்பு வளர்கிறான்.
இதில் சில நாள் அதில் சில நாள் என
செளகரியத்திற்கு வார்த்துப் போடுகிறான் அவன் நாட்களை
கவிதை பாட என்று ஒரு காலை
அமைதி அனுபவிக்க ஒரு குளக்கரை
அயர்ந்து தூங்க ஒரு மரக்கிளை
புல்லாங்குழல் வாசிக்க ஒரு இடம்.
தச்சு வேலை செய்ய ஒரு வீடு
ஓவியம் தீட்ட சில முகங்கள்
ஆருடம் சொல்ல சில கவலைக்காரர்கள்
விளையாட சில தோழர்கள்
வஞ்சமென்றும், கோபமென்றும் பார்க்காத விரதம் இல்லை
தட்டிக் கேட்டு சண்டை பயிலவும் சில முரட்டுக் கைகள்
வளர எந்த உந்தலுமில்லை, ஆயினும்
முதிர போகும் பயணமிது
பல வாசங்கள் முகர்ந்து பார்க்க
விளையாட்டுக்கு திரியும் இளங்கன்று போல்
எல்லாமே சொந்தம்.
உறவு வளர பயமில்லை முதல் காதல் போல்
இரவெல்லாம் கண்விழித்து
புன்னகை தரிக்கிறான்.
பிரிந்த போது கண்ணீர் சிந்தி பறக்கிறான்.
எங்கோ சென்று ஏதோ செய்ய
சுதந்திரம். மண்ணில் நட்டு வைக்கவில்லை
எதையும். காற்றில் அலையும் காகிதம்.
சுகம் மட்டும் தேடும் சுகவாசி.
மிடுக்காய் அலையும் சன்னியாசி.
No comments:
Post a Comment