வயல்கள் அதிகம் இருந்த ஊரிலிருந்து வந்தவனை
மெயின் கிராஸ் களாலான பெங்களூருக்கு
அறிமுகம் செய்தேன்.
சகதி நிறைந்த மார்கெட்,
வாழை இலை நறுக்கி விற்கப்படும் சந்தை
கற்களால் செய்த நடைபாதைகள் வழியாக
போக வேண்டிய இடத்திற்கு கூட்டிச் சென்றேன்.
பார்த்துப் போ, கவனமாய் இரு, சொல்லிட்டுச் செய்,
என்று நான் கூரியதெல்லாம் அவன் காதில் விழுந்தாய்
தெரியவில்லை. இந்த நகரம் ஒரு பெரிய இயந்திரமாய்,
அதன் உள்ளே ஓடும் சக்கரங்கள் அவனை ஈர்ப்பதாய்
கை நீட்டிப் போனான்.
ஏதோ ஒரு நகருக்கு நானும் இப்படி அடிமையானதை
நினைத்து எனக்குள் சிரித்தேன். அவனைப் பற்றி பிறகு
நான் நினைக்கவில்லை.
நான் கடிந்ததற்காய் இன்றும் என்னிடம் சொல்லிவிட்டுப்
போகிறான் ஊருக்கு. நகரத்தை விட்டுப் பிரியும்போது
மட்டும் நான் சொன்னதெல்லாம் அவனுக்குள்
எதிரொலிக்கிறதோ என்னவோ.
உனக்கு இவனை தாரை வார்த்து விட்டேன். பார்த்துக்கொள்.
No comments:
Post a Comment