Wednesday, February 25, 2009

கனா

இரவின் மை தாண்டிய சின்ன நிலவொளி
பாறை புல் எனப் பிரித்து உணர முடியாத நிலப்பரப்பு
கைகள் உயர்த்தி காற்றில் மிதக்கும் கனா

என்னை தழுவி காற்றில் மிதக்கும் மென்மைத் துகில்
ஒடுங்கி கீழே இறங்கி நீர் பரப்பில் கால் உந்தி
உயர எம்பி சிறகு விரித்து காற்றில் சறுக்கிப் பயணம்
இந்த நிலம் என் மனமாய், உயர்ந்து நிற்கும் மலைகள்
ஆர்பரிக்கும் கடல் என வகை வகையாய் என் நினைவுகள்.

வேகம் குறைத்து கடற்கரை மனலில் கால் பதித்து
தளர்ந்து விழுகிறேன்; சற்று முன் அடித்த பெரிய அலையின்
வேகம் வாங்கி மெல்லிய ஈரமாய் என் அடியில் நகரும் மனல்

தெளிந்த வானம், தூரத்தில் எங்கோ, பூமியோடு வானம்
இடியிட்டு சிணுங்கித் திரிகிறது.
திண்னை வயப்பட்ட கிழவன் வீசும் விசிறி வேகத்தில்
கடல் என்னை நோக்கி தண்ணீர் அலை வீசுகிறது

கையில் மனல் அள்ளி திருப்பி தளர விட,
ஒவ்வொரு துகளாய் சரிந்து விழுகிறது
மனலின் ஈரம் கொடுக்கும் உணர்ச்சி உணர்ந்து
புரண்டு படுக்கிறேன், கன்னங்களில் மனல்
குருணை உணர்ந்த, கைகள் மனல் பரப்பை வருடுகிறது

குறும்புச் சிறுவன் போல் ஒரு அலை மெல்ல
அடி எடுத்து என் பாதம் தொட்டு தனக்குள் சிரித்து
திரும்புகிறது.

என் நினைவுகள் எல்லாம் என்னை அழுத்துவது போல்
நிலத்தோடு நிழலாய் ஒட்டி கிடக்கிறேன்
எத்தனை அலைகள் அதன் பின் அடித்ததென தெரியவில்லை
அயர்ந்து மறைந்தேன்.

No comments: