இது ஒரு வழக்கமாகி விட்டது
நரை ஓடிய பெற்றோர்
தம்பதியராய் அமர்ந்து
புது மனை புகு விழா நடக்கிறது
வேற்று கிரகதிலிருந்து தொலைபேசி
அழைப்பு, எல்லாம் நன்றாக நடக்கிறதா,
யார் யார் வந்திருக்கிறார்கள்,
சரி பிறகு அழைக்கிறேன்.
வாங்க மாமா, வாங்க அத்தை,
வாடா மச்சான், அய் குட்டி சட்டை சூப்பர்
என்று, வாய் நிறைய வரவேற்று,
என் இடம் இது, நான் நன்றாய் வாழ
நீங்கள் வாழ்த்துங்கள் என்று
பொரியவர்கள் காலில் விழும் சுகம் ...
புதிதாய் வாங்கிய மனையில் அமர்ந்து
இயற்கைக்கு நன்றி சொல்லி
மன் பிளந்து, பாறை பிளந்து செய்த பாவத்திற்கு
மன்னிப்பு கேட்டு, தெய்வத்தை வணங்கி,
வீட்டை கோவிலாக்கும் சடங்கு செய்து
புல்லரித்து அன்று அங்கு தனியாய் உறங்கும்
சுகம் ...
சுவரின் ஈரம் முகர்ந்து,
இங்கு என் பிள்ளை விளையாடுவான்,
இங்கு என் மகள் கோடு கிழிப்பாள்,
இங்கு என் மனைவி கோலம் போடுவாள்
இங்கு எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து சிரிப்போம்
என்று தனக்கு தானே சிரித்து பிரம்மிப்படையும்
அந்த முதல் நாள் ...
(பெருமூச்சு ...)
No comments:
Post a Comment